பொங்கலுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்களின் திரையரங்க ஒதுக்கீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் ‘துணிவு’. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், யாருக்கு அதிக திரையரங்கம் ஒதுக்கப்படும் என்கிற கேள்விகள் எழுந்தன.
இதுகுறித்து முன்னதாக, துணிவு படத்தினை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனர் உதயநிதி ஸ்டாலின் ‘பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் சரி சமமான திரையரங்குகளில் வெளியாகும்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இறுதி நிலவரம் குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாரிசு திரைப்படத்தை விட அதிக திரையரங்குகளில் துணிவு வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட திரைகளில் துணிவு திரையிடப்பட உள்ளதாகவும் தகவல்.
மேலும், துணிவு படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.