பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது!

“கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீது சோலார் மோசடி வழக்கில் கைதான முக்கிய பெண் குற்றவாளி கூறிய பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது´ என்று கேரள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
2012 இல் உம்மன்சாண்டி முதல்வராக இருந்தபோது சோலார் ஏலத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்தது அம்பலமானது.
அப்போது சோலார் மோசடி வழக்கில் சிக்கிய முக்கிய பெண் குற்றவாளி, 2013 ஜூலை 19 ஆம் திகதி காவல் ஆணையரிடம் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, முன்னாள் மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால் உள்பட 6 பேர் மீது பாலியல் புகார் அளித்தார்.
அதன்பேரில், உம்மன்சாண்டி மற்றும் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே.சி.வேணுகோபால், முன்னாள் எம்.பி.க்கள் ஹிபி எடன், அடூர் பிரகாஷ், முன்னாள் பேரவை உறுப்பினர் ஏ.பி. அனில் குமார், பாஜக தேசிய துணைத் தலைவர் ஏ.பி. அப்துல்லா குட்டி ஆகியோர் மீது கேரள குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பான மேல் விசாரணை நடத்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, சிபிஐக்கு கடந்த ஆண்டு மாற்றி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை கடந்த ஆண்டு முதல் சிபிஐ விசாரித்து வருகிறது.
கேரள அரசின் நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.
தேர்தலை மனதில் கொண்டு அரசியல் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும்; காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் அரசு கண்டறிய முடியாது என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருவனந்தபுரம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிபிஐ தரப்பில் செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் “உம்மன்சாண்டி மீதான பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது. அவர் மீது பாலியல் புகார் கூறிய பெண் சம்பவத்தன்று உம்மன்சாண்டியின் அரசு இல்லத்துக்குச் சென்றதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.
இந்த வழக்கு முற்றிலும் ஜோடிக்கப்பட்டுள்ளது´ என்று தெரிவித்துள்ளனர்.