Post

Share this post

15 வயதைக் கடந்தால் முஸ்லிம் சிறுமிகளின் திருமணம்?

பருவம் எய்திய 15 வயது முஸ்லிம் சிறுமிகள் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள இயலுமா என்பதை ஆராய ஒப்புக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், இது தொடா்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கும் ஹரியாணா மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹரியாணாவைச் சோ்ந்த 26 வயது முஸ்லிம் நபா், 16 வயது முஸ்லிம் சிறுமியைத் திருமணம் செய்துகொண்டாா். ஆனால், இது சிறாா் திருணம் எனக் கூறி அந்தச் சிறுமி பஞ்ச்குலாவில் உள்ள சிறாா் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா். மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் அந்த முஸ்லிம் நபா் மனு தாக்கல் செய்தாா்.
முஸ்லிம் தனிநபா் சட்டப்படி 15 வயதைக் கடந்த பருவம் எய்திய முஸ்லிம் பெண் தன் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதால், தன் மனைவியை சிறாா் காப்பகத்தில் இருந்து விடுவிக்க வேண்டுமென அந்த மனுவில் அவா் கோரியிருந்தாா். அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், பருவம் எய்திய முஸ்லிம் பெண்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப திருமணம் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ’14, 15, 16 வயது முஸ்லிம் சிறுமிகளுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டு வருகிறது. தனிநபா் சட்டத்தின் அடிப்படையில் அதை ஏற்க முடியுமா? குற்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க தனிநபா் சட்ட விதிகளைப் பயன்படுத்த முடியுமா?’ என்றாா். அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ’இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, மற்ற வழக்குகளுக்கான முன்னுதாரணமாக இருந்துவிடக் கூடாது. இந்த விவகாரம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது’ என்றனா். இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசு, ஹரியாணா மாநில அரசு உள்ளிட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Recent Posts

Leave a comment