Post

Share this post

பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா (86) இன்று காலமானார். அவருக்கு வயது 86.
மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜமுனா. தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் கமலின் தாயாக நடித்தார்.
1936-ல் கர்நாடகத்தின் ஹம்பியில் பிறந்தார் ஜமுனா. நிஜப் பெயர் ஜனா பாய். 1953-ல் 16 வயதில் புட்டிலு என்கிற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் 1954-ல் பணம் படுத்தும் பாடு என்கிற படத்தில் அறிமுகமானார். 1955-ல் மிஸ்ஸியம்மா படத்தில் நடித்து புகழை அடைந்தார். குழந்தையும் தெய்வமும் படத்தில் இடம்பெற்ற அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் என்கிற அருமையான பாடலில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனத்துக்கு நெருக்கமானார்.
ஹிந்திப் படங்களில் நடித்து ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்றார். நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜமுனா, 1989ல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990களின் இறுதியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் வயதுமூப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார் ஜமுனா. அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளார்கள். ஜமுனாவின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Recent Posts

Leave a comment