2024 வரை சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடுவேன் என முன்னணி ஆஸி. பேட்டர் டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற 2 வது டெஸ்டில் ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னருக்குக் காயம் ஏற்பட்டது. முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வார்னர் விலகினார். சிகிச்சைக்காக உடனடியாகக் குடும்பத்தினருடன் சிட்னிக்குத் திரும்பியுள்ள வார்னர், டெஸ்ட் தொடருக்குப் பிறகு நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பியுள்ள வார்னர், செய்தியாளர்களிடம் பேசியதாவது :
2024 வரை நான் விளையாடுவேன் என்று கூறியுள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு இடமில்லை என தேர்வுக்குழுவினர் கருதினால் அப்படியே இருக்கட்டும். வெள்ளைப் பந்து அணிகளில் இடம்பெற முயல்வேன். அடுத்த ஒரு வருடத்தில் ஏராளமான கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
நான் தொடர்ந்து ஓட்டங்கள் குவித்தால் என் இடத்தைத் தக்கவைத்து அணிக்கும் உதவுவேன். 36 வயது வீரரை விமர்சனம் செய்ய விமர்சகர்களுக்கு எளிதாகவே இருக்கும். முன்னாள் வீரர்களுக்கு இப்படி நடந்ததை நான் பார்த்துள்ளேன். நிறைய ஓட்டங்கள் எடுத்து அணி வீரர்களுக்கு நான் உதவ வேண்டும் என்றார்.