அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக கொழும்பு மாவட்ட செயலகம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு, திம்பிரிகஸ்சாய, கொலன்னாவை, இரத்மலானை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளே இவ்வாறு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 908 வீடுகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அடுக்குமாடி கட்டிடங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை, தொழில் திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.
கொழும்பு மாவட்ட செயலகத்தின் பிரகாரம் கொழும்பு பிரதேச செயலகத்தில் 420 வீடுகளும், திம்பிரிகஸ்யா பிரதேச செயலகத்தில் 120 வீடுகளும், கொலன்னாவை பிரதேச செயலகத்தில் 60 வீடுகளும், இரத்மலானை பிரதேச செயலகத்தில் 01 வீடும், மொரட்டுவை பிரதேச செயலகத்தில் 307 வீடுகளும் இடிந்து விழும் நிலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களாகும்.
கொழும்பு மாவட்டத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும் இக்கட்டிடங்கள் பாவனைக்கு தகுதியற்றவை எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.