தமிழ், மலையாளம், கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வில்லனாக மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் கசான் கான் நேற்று (12) மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்தை மலையான திரைத்துறையின் தயாரிப்பாளர் என். எம். பாதுஷா உறுதிப்படுத்தி உள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட கசான் கான், தமிழ் சினிமாவில் செந்தமிழ்பாட்டு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இவர் தமிழில் செந்தமிழ்பாட்டு, கலைஞர், சேதுபதி ஐ. பி. எஸ், பிரியமானவளே உள்ளிட்ட சுமார் 50 படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர். இதேபோல், கன்னடம், மலையாள மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.