ஏஐ எனப்படும் எந்திரன் என்னவேண்டுமானாலும் செய்வான் என்பதற்கு எஸ்பிபியின் இந்த ரத்தமாரே பாடல் சிறந்த உதாரணம்.. எஸ்பிபியே மீண்டும் உயிரோடு வந்து பாடியதுபோல் இந்த பாடல் இருக்கிறது.
ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த், மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா, வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு, ஜாபர் சாதிக், கிஷோர், பில்லி முரளி, சுகுந்தன், கராத்தே கார்த்தி, மிதுன், அர்ஷத், மாரிமுத்து , ரித்விக், சரவணன், அறந்தாங்கி நிஷா, மகாநதி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ளது..
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் இயக்கி உள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜெயிலர் இன்று (ஆக.10) தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் பாடல்கள் காவாலா, ஹுக்கும், கலாவணி கண்ணையா, ரத்தமாரே ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் பாடல்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்தின் மீது உருவாக்கி உள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய டாப் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளதும் ஜெயிலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம் என்ற வகையில் ரத்தமாரே பாடல் கிட்டத்தட்ட கமலின் விக்ரம் படத்தில் வரும் போர் கண்ட சிங்கம் பாடலை போல் உருக்கமாக அமைத்துள்ளார்கள். சரி அதற்கு மேல் போக வேண்டாம். நாம் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டு போவோம். அனிருத் இசையமைக்க விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் தான் ரத்தமாரே. இந்த பாடலினை விஷால் மிஸ்ரா சிறப்பாக பாடியிருப்பார். சன் டிவி தனது யூடியூப் தளத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு தான் வெளியிட்டது. மிகவும் மெலடி பாடலான இந்த பாடலினை எஸ்பிபி பாடினால் எப்படி இருக்கும் என்று ஏஐ விரும்பிகள் யோசித்தார்கள். விளைவு அப்படியே எஸ்பிபி வெர்சனை உருவாக்கிவிட்டார்கள். ரத்தமாரே பாடலினை ஏஐ வெர்சனில் கேட்கும் போது, உண்மையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் உயிரோடு மீண்டும் வந்துவிட்டாரோ என்று தோன்றும். அவ்வளவு சுத்தமாக வடிவமைத்துள்ளார்கள் ஏஐ வடிவமைப்பாளர்கள்.
ஏஐ ஏற்கனவே தமன்னாவிற்கு பதில் காஜல் அகர்வால், சிம்ரன் உள்பட பலரை தத்ரூபமாக ஆட வைத்து காட்டியது. இதெல்லாம் அவர்களே ரீல்ஸ் போட்டார்களா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியது. ஏஐ மூலம் தற்போது எஸ்பிபி உயிர் பெற்றுள்ளார். பாடல்களால் அவர் ஏற்கனவே நம்மோடு வாழ்ந்து வருகிறார். இப்போது ஏஐ மூலம் வாழ போகிறார்.. ரத்தமாரே பாடல் மட்டுமல்ல.. எந்த பாடல் எல்லாம் எஸ்பிபி பாடினால் நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்புகிறார்களோ அந்த பாடலை எஸ்பிபி குரலில் கூட இனி கேட்க முடியும். இனிவரும் காலங்களில் எந்த குரலும் அழியப்போவது இல்லை. இந்த உயிர் அழிந்தாலும், அதனை தத்ரூபமாக ஏஐ மூலம் கொண்டுவந்துவிட முடியும். நாம் காண விரும்பும், காண வேண்டியர்களையும் ஏஐ நம் கண் முன்னே நிச்சயம் நிறுத்தும்.
அதேநேரம் பெரும் சிக்கலையும் ஏஐ ஏற்படுத்த போகிறது, தத்ரூபமாக பல மார்ப்பிங்ஐ இந்த ஏஐ மூலம் செய்ய முடியும் என்பதால்.. யாரை பற்றியும் எப்படிப்பட்ட வீடியோவையும் ஏஐ இல் உருவாக்கி உலாவ விட முடியும். ஒரிஜினலை விட ஏஐ தத்ரூபமாக இருக்கும் என்கிற அளவிற்கு வளர்ந்து வருகிறது. எனவே ஏஐ கண்டுபிடித்தவர்கள், ஏற்படுத்த போகும் குழப்பத்திற்கும் தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்.. இல்லாவிட்டால், மனிதன் எந்திரனோடு சண்டை போடும் நிலைக்கு காலம் தள்ளிவிடும்.