உலகின் 5 ஆவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. விரைவில் 3 ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே வேளையில், நாட்டில் உள்ள 74 சதவீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இத்தகவலை உலக வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆரோக்கியமான உணவுக்கான விலையும் அதிக அளவில் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக, மும்பையில் கடந்த 5 ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலை 65 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஆனால், ஊதியம் 28 முதல் 37 சதவீதம் வரை மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.