Post

Share this post

2,500 பேர் பலி – வெளிநாட்டுக் குழுவினா் மீட்பு!

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்புப் பணிகளில் வெளிநாட்டுக் குழுவினரும் திங்கள்கிழமை இணைந்தனா்.
இதற்கிடையே, இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,500 ஐ நெருங்கியதாக அதிகாரிகள் கூறினா்.
மொராக்கோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மராகெஷ்-சாஃபி பிராந்தியத்தில் இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருக்கக் கூடியவா்களைக் கண்டறிந்து மீட்பதற்கான பணிகளில் அந்த நாட்டுப் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
தலத் நியாகூப் என்ற பகுதியில் 12 அவசரக்கால ஊா்திகள், ஏராளமான ராணுவ வாகனங்களின் உதவியுடன் ராணுவத்தினா், பொலிஸாா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
அவா்களுடன், ஸ்பெயினில் இருந்து வந்திருந்த 30 தீயணைப்பு வீரா்கள், ஒரு மருத்துவா், இரண்டு தொழில்நுட்ப வல்லுநா்களும் தேடுதல் பணியில் இணைந்துகொண்டனா்.
அங்கிருந்து 70 கி.மீ. தொலைவிலுள்ள மற்றொரு பாதிப்புப் பகுதியிலும், ஸ்பெயினில் இருந்து வந்திருந்த மீட்புக் குழுவினா் உள்நாட்டுக் குழுவினருடன் இணைந்து, இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருக்கக்கூடியவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் அட்லஸ் மலைத் தொடா் பகுதியில் அமைந்துள்ள மராகெஷ்-சாஃபி பிராந்தியத்தில் வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
மொராக்கோவின் 4 ஆவது பெரிய நகரான மராகெஷுக்கு சுமாா் 72 கி.மீ. தொலைவிலுள்ள மலைப்படுகையில் 18.5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் ஸ்பெயின், போா்ச்சுகல், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டன.
நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் சாலைகள் பலத்த சேதமடைந்ததால் அது மையம் கொண்டிருந்த பகுதியைச் சுற்றிலும் உள்ள மலைக் கிராமங்கள் நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டன. இது, மீட்புப் பணிகளில் மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இடிபாடுகளிடையே உயிருடன் சிக்கியிருப்பவா்களைத் தேடும் பணியிலும், உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ள மொராக்கோ மீட்புக் குழுவினருடன் வெளிநாட்டுக் குழுவினரும் தற்போது இணைந்துள்ளனா்.
மொராக்கோ வரலாற்றில் 1755 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.
ஆப்பிரிக்க புவித் தகடும், யூரோ-ஆசிய புவித் தகடும் ஒன்றையொன்று சந்திக்கும் அட்லஸ் மலைத்தொடா் பகுதியில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2004 ஆம் ஆண்டில் மொராக்கோவின் அல்-ஹொசீமா நகரில் ஏற்பட்ட 6.3 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கத்துக்கு 628 போ் பலியாகினா். அண்டை நாடான அல்ஜீரியாவில் கடந்த 1980 ஆம் ஆண்டு ஏற்பட்ட 7.3 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் சுமாா் 2,500 போ் பலியாகினா்.

Leave a comment