நடிகா் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடா்ந்த வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததால், நடிகா் விஷால் செப். 22 ஆம் திகதி நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகா் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியா் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ. 21 கோடியே 29 லட்சம் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்துக்கு எதிராக, லைகா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.15 கோடியை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமா்வு, தொகையை செலுத்தாவிட்டால், தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீா்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நடிகா் விஷால் நேரில் ஆஜராகியிருந்தாா். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, விஷாலின் நான்கு வங்கிக் கணக்குகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன என்பதையும் சொத்து ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தாா்.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகா் விஷால் தரப்பில் வழக்குரைஞா் ஆஜராகவில்லை. அதேவேளையில், நான்கு வங்கி கணக்குகளின் விவரங்கள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்துவிவரங்களின் ஆவணங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யாததால் நடிகா் விஷால் வரும் 22 ஆம் திகதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னா் பிற்பகலில் நடிகா் விஷால் தரப்பு வழக்குரைஞா், விஷால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதை ஏற்க மறுத்த நீதிபதி, நடிகா் விஷால் செப். 22 ஆம் திகதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டாா்.