தமிழீழத்தை ஏற்படுத்த மோடியிடம் கோரிக்கை!

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி தமிழீழத்தை ஏற்படுத்த வேண்டும் என மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆனாலும், இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என எனக்கு மன வருத்தம் உள்ளது.
இந்த காரணத்திற்காகவே காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆள முடியவில்லை. வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.
தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்க இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.
அத்துடன், இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி தமிழீழத்தை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் முறையாக வாக்களித்து அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு வாக்களித்து இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது.
இலங்கை தமிழர்கள் விவகாரம் மற்றும் கச்சத்தீவு விவகாரம் என இரண்டிற்காகவும் நான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன்.
மேலும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.