ஜனாதிபதியின் உரையின் நேரத்தில் மாற்றம்!

2024 நவம்பர் 21 ஆம் திகதி முற்பகல் 11.30 மணிக்கு 10 வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தமது அரசாங்க கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நவம்பர் 21 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் முற்பகல் 11:30 மணி அளவில் ஜனாதிபதி, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பிப்பார்.
முன்னதாக, நவம்பர் 21 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசியலமைப்பின் 33(a) பிரிவின்படி, பாராளுமன்றக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கக் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
அத்துடன்,அரசியலமைப்பின் 33 (b) யின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வுகளுக்கு தலைமை தாங்குவதற்கும் உரிமையுடையவர்.
இந்த அமர்வின் போது, கொள்கை அறிக்கையின் மூலம் அரசாங்கத்தின் தொலைநோக்கு மற்றும் வரவிருக்கும் முன்முயற்சிகள் பற்றிய விரிவான விளக்கத்தை ஜனாதிபதி பாராளுமன்றில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Courtesy: Sivaa Mayuri