சின்னத்திரை பிரலங்களான அமீர் – பாவனி நடிப்பில் ”செந்தாமரையே…” எனும் தனிப்பாடல் யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் அமீர் – பாவனி. இவர்களுக்கிடையே காதல் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒளிபரப்பான ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் அமீர் – பாவனி ஜோடி வெற்றி வாகை சூடினர்.
இதனைத் தொடர்ந்து அமீரிடம் பாவனி தனது காதலை சமுகவலைதளம் மூலம் வெளிப்படுத்தினார். இதனால் இந்த ஜோடிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், அமீர் – பாவனி இருவரும் இணைந்து தனிப்பாடலில் நடித்துள்ளனர். ’’செந்தாமரையே பேரன்பின் பேரலையே..’’ எனத் தொடங்கும் பாடல் யூடியூபில் (செப்.20) மாலை வெளியானது. இப்பாடலை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
யூடியூபில் வெளியான சிலமணி நேரங்களிலேயே லட்சக்கணக்கானோர் பாடலைக் கண்டுள்ளனர். இந்தப் பாடல் ஜெரால்ட் – ஏ.கே.சசிதரன் கூட்டணி இசையில் உருவாகியுள்ளது. ஸ்ரீகாந்த் பாடல் எழுதி இயக்கியுள்ளார்.
தினேஷ் படத்தொகுப்பு செய்ய, டி.எஸ். பிரசன்னா ஒளிப்பதிவில் பாடல் உருவாகியுள்ளது.