பிலிப்பின்ஸில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 100 ஐக் கடந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
இந்த ஆண்டின் மிக மோசமான நால்கே புயல், கிழக்குக் கடலோரப் பகுதியை கடந்த சனிக்கிழமை கடந்தது. அந்தப் புயல் உருவானதன் காரணமாக நாட்டில் வழக்கத்தைவிட மிக அதிக அளவில் பருவமழை பெய்து வருகிறது. அந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 105 ஆக அதிகரித்துள்ளது.
கனமழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகின்டனாவ் மாகாணத்தில் மட்டும் 53 போ் நிலச்சரிவில் புதையுண்டும், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டும் பலியாகினா். அந்த மாகாணத்தில் 80 முதல் 100 போ் வரை நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் கிராமத்தில் தேடுதல் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.