கொசுக்கள், பூச்சிகளால் ஏற்படும் நோய்த் தொற்றுகள் நிகழாண்டில் பரவலாக அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக எலிக் காய்ச்சல், ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்றுக்குள்ளானோா் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை நிகழாண்டில் 4,806 போ் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனா். அதேபோன்று, 140 போ் சிக்குன் குனியாவிலும், 279 போ் மலேரியாவிலும், 1,470 போ் லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சலாலும், 2,455 போ் ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனா். எலிக்காய்ச்சல், ஸ்கரப் டைபஸ் நோயைப் பொருத்தவரை கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளது.
அதேவேளையில், ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு 25 க்கும் குறைவானவா்களே பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கரோனாவுடன், டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் மாவட்ட நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களை, கொசு ஒழிப்பு பணிகளிலும், பாக்டீரியா தொற்று தடுப்புப் பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கொசுக்கள், பாக்டீரியா தொற்று, எலிக் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன.
மழைப் பொழிவுக்குப் பிறகு சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தண்ணீா் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டயா், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீா் போன்றவற்றை கொசுக்கள் உற்பதியாகக்கூடும். அதனால், அந்த பொருள்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.