பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (91) ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது இல்லத்தில் காலமானார்.
சென்னை தி நகர் நாதமுனி தெருவில் மாதா கேஸல் இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்(91) வயது மூப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6:40 மணியளவில் அவரது இல்லத்தில் காலமானார்.
இவருக்கு மகன் ஏ. ரவிச்சந்தர், மகள்கள் ஏ. தாராதேவி, ஏ. ஆஷாதேவி உள்ளனர்.
ஆரூர்தாஸ் உடல் திங்கள்கிழமை (நவ. 21) மதியம் 12 மணி வரை அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிவாஜிகணேசன் நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ மகன், பைலட் பிரேம்நாத், நான் வாழவைப்பேன், விஸ்வரூபம், தியாகி, விடுதலை, குடும்பம் ஒரு கோவில், பந்தம், அன்புள்ள அப்பா.
எம்ஜிஆர் நடித்த தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், அன்பே வா, குடும்பத்தலைவன், நீதிக்குப்பின்பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், ஆசைமுகம், பெற்றால்தான் பிள்ளையா?,
ஜெமினிகணேசன் நடித்த வாழவைத்த தெய்வம், சவுபாக்கியவதி, திருமகள், பெண் என்றால் பெண் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு கதாபாத்திரம் அறிந்து உணர்ந்து, வசனம் எழுதி, தான் பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர் ஆரூர்தாஸ்.