சீரியலில் இருந்து விலகிய நடிகை!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடரிலிருந்து நடிகை தர்ஷனா அசோகன் விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் கனா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவு கொண்ட கிராமத்துப் பெண்ணுக்கு ஏற்படும் தடைகளும், அதனை அவர் எதிர்கொள்ளும் சூழல்களுமே கனா தொடரின் மையக்கதை.
இந்தத் தொடரில் நடிகை தர்ஷனா அசோகன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக விஷ்ணு உன்னிகிருஷ்ணன் நடித்து வருகிறார்.
கனா தொடரில் நடித்ததற்காக ஜீ தமிழ் சின்னத்திரை விருதையும் நடிகை தர்ஷனா வென்றுள்ளார். அதோடு மட்டுமின்றி நண்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக மக்களைக் கவர்ந்த தொடர் என்ற பிரிவிலும் கனா தொடர் விருது வென்றுள்ளது.
இந்நிலையில், கனா தொடரிலிருந்து நடிகை தர்ஷனா விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தர்ஷனாவின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.