OOSAI RADIO

Post

Share this post

ஒரு மணி நேரத்தில் கடவுச்சீட்டு – சர்ச்சையை ஏற்படுத்திய அதிகாரி!

இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் நெருக்கடி நிலைமை நீடித்து வரும் நிலையில், ஒரு மணி நேரத்தில் அதனை பெற்றுக்கொண்ட அரச அதிகாரியினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் வியானி குணதிலக்க நேற்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வந்து ஒரு மணித்தியாலத்தில் தனது புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார்.

அவர் காலை 10.15 மணிக்கு வந்ததாகவும், 11.30 மணியளவில் அவர் தனது இராஜதந்திர சிறப்புரிமையை ரத்து செய்துவிட்டு சாதாரண கடவுச்சீட்டை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி இந்திக்க ஹேரத் இதற்காக உதவியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த கடவுச்சீட்டை வியானி குணதிலக்க உடனடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் 3001 என்ற டோக்கன் இலக்கத்தை வழங்கி ஒரு மணித்தியாலத்தில் அது தொடர்பான வேலைகளை அவர் செய்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த வியானி குணதிலக்க மற்றும் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய ஆகியோரின் ஆதரவுடன் இந்திக ஹேரத் என்ற நபர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

நாட்டு மக்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஒரு திகதியில் கடவுச்சீட்டு பெற நீண்ட நேரம் வரிசையில் நின்று டோக்கன் எடுத்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நிலையில், வியானி VIP பிரிவில் இருந்து ஒரு மணி நேரத்தில் கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

Leave a comment

Type and hit enter