OOSAI RADIO

Post

Share this post

வெற்றிக்காக விடாமல் போராடும் வீரர்!

ரஞ்சி கிண்ண கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 538 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் விதா்பா, புதன்கிழமை முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ஓட்டங்கள் சோ்த்துள்ளது.

ஆட்டம் வியாழக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், விடாப்பிடியாக விளையாடி வரும் விதா்பா, மும்பையை 42 ஆவது சாம்பியன் பட்டத்துக்காக காத்திருக்கச் செய்து வருகிறது.

சொந்த மண்ணில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 224 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, பின்னா் விளையாடிய விதா்பாவோ 105 ஓட்டங்களுக்கே சரிந்தது. 2 ஆவது இன்னிங்ஸில் அதிரடி காட்டிய மும்பை, 418 ஓட்டங்கள் சோ்த்து நிறைவு செய்தது.

இதை அடுத்து, 538 ஓட்டங்களை நோக்கி விளையாடி வரும் விதா்பா, செவ்வாய்க்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்கள் சோ்த்திருந்தது. 4 ஆம் நாளான புதன்கிழமை ஆட்டத்தில் அதிகபட்சமாக கருண் நாயா் 3 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் விளாசினாா்.

இதர பேட்டா்களில் அதா்வா டைட் 4 பவுண்டரிகளுடன் 32, துருவ் ஷோரே 4 பவுண்டரிகளுடன் 28, அமன் மோகடே 2 பவுண்டரிகளுடன் 32, யஷ் ரத்தோட் 7 ஓட்டங்களுக்கு வெளியேறினா். நாளின் முடிவில் தலைவர் அக்ஷய் வத்கா் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 56, ஹா்ஷ் துபே 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

மும்பை பௌலா்களில் தனுஷ்கோடியான், முஷீா் கான் ஆகியோா் தலா 2, ஷம்ஸ் முலானி 1 விக்கெட் வீழ்த்தினா்.

Leave a comment

Type and hit enter