OOSAI RADIO

Post

Share this post

புதிய அரசுக்கு 6 சுயேட்சை குழுக்கள் ஆதரவு!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி அமைக்கவுள்ள அரசுக்கு மேலும் 6 சுயேச்சை எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனா்.

இது குறித்து அந்த நாடு ஊடகங்கள் வியாழக்கிழமை கூறியதாவது:

புதிதாக ஆட்சியமைக்கவிருக்கும் பிஎம்எல்-என் கட்சியில் 6 சுயேச்சை எம்.பி.க்கள் இணைந்துள்ளனா். அதை அடுத்து, பாராளுமன்றத்தில் அந்தக் கட்சியின் பலம் 80 ஐக் கடந்துள்ளது. ஏற்கெனவே, புதிய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) அறிவித்துள்ளது.

மேலும், பிஎம்எல்-என் அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஏற்கெனவே அந்தக் கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பிற கட்சிகளும் அறிவித்துள்ளன. பஞ்சாப் மாகாணத்திலும், முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பிடிஐ ஆதரவுடன் வெற்றி பெற்ற 3 சுயேச்சைகள் பிஎம்எல்-என் கட்சியில் இணைந்துள்ளனா். அதை அடுத்து, மாகாணப் பேரவையில் அந்தக் கட்சியின் பலம் 150 ஐ கடந்துள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் பாராளுமன்றத் தோ்தல் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றது. இதில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள்தான் மிக அதிகமாக 101 இடங்களைக் கைப்பற்றினா். ஊழல் மற்றும் ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் இம்ரான் சிறைவைக்கப்பட்டுள்ளாா். அவரது கட்சி தோ்தலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால், தோ்தலில் அவரது கட்சி வேட்பாளா்கள் சுயேச்சையாகப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

ராணுவத்தின் ஆசி பெற்றதாகக் கூறப்படும் பிஎம்எல் என் கட்சி 75 இடங்களை மட்டுமே பெற்றது. முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு (பிபிபி) 54 தொகுதிகள் கிடைத்தன. அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் பிஎம்எல்-என் கட்சியுடனோ, பிபிபி கட்சியுடனோ இணைந்து ஆட்சியமைக்கப் போவதில்லை என்று இம்ரான் கான் கூறிவிட்டாா்.

அதை அடுத்து, நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையில் பிஎம்எல்-என் ஆட்சியமைக்கிறது. பஞ்சாப் மாகாணத்தில் நவாஸின் மகள் மரியம் நவாஸ் தலைமையில் அதே கட்சி ஆட்சியைமைக்கிறது.

Leave a comment

Type and hit enter