OOSAI RADIO

Post

Share this post

அமெரிக்காவில் மாணவர் மரணம்!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜீத் பருச்சுரு (20) என்ற மாணவர் அமெரிக்காவில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்துள்ளார்.

போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்த அபிஜீத், கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றதுடன், அங்கு தன்னுடன் படிக்கும் சக மாணவருடன் சேர்ந்து ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், ஆள் நடமாட்டமில்லாத வனப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து கடந்த 11 ஆம் திகதி அன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பருச்சுரி சக்ரதர் ​​- ஸ்ரீலட்சுமி தம்பதியினரின் ஒரே மகனான அபிஜீத் தனது தாயாரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தங்களது ஒரே மகன் மரணமடைந்த செய்தியை கேட்ட அபிஜீத்தின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதனை அடுத்து அமெரிக்காவில் மரணமடைந்த மாணவர் அபிஜீத்தின் உடல், குண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு கடந்த வெள்ளியன்று கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் மாணவர் அபிஜீத்தின் மறைவு குறித்தும், இந்த வழக்கின் விசாரணை குறித்தும் மார்ச் 18 எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது, மாணவர் அபிஜீத்தின் பெற்றோர் விசாரணை அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் மாணவர் அபிஜீத்தின் மரணத்தில் குற்றச்செயல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் விசாரணையின் முடிவில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த முழுவிவரமும் தெரிய வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பிலிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடப்பாண்டில் இதுவரை இந்தியாவை சேர்ந்தவர்கள் 9 பேர், இதை போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் கொல்கத்தாவை சேர்ந்த நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் அமெரிக்காவின் மிசௌரியில் சுட்டுக் கொல்லப்பட்டார். பிப்ரவரி தொடக்கத்தில், சமீர் காமத் என்ற 23 வயது இந்திய மாணவரின் உடல் இண்டியாண பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவங்களும் அவற்றுள் அடங்கும்.

இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய மாணவர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தியதோடு மாணவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள 90 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் இந்த உரையாடலில் பங்கேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter