OOSAI RADIO

Post

Share this post

வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு

ஹிமாசல மாநிலம் கஷாங் நாலா அருகே கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்ததில் காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை முன்னாள் மேயா் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் சென்ற கார், சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், கடந்த எட்டு நாள்களாக, வெற்றி துரைசாமியின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (45) கடந்த சில நாள்களுக்கு முன்பு ஹிமாசல பிரதேசத்துக்கு தனது நண்பா் கோபிநாத் என்பவருடன் சென்றாா்.

பெப். 4 ஆம் திகதி, ஹிமாசல மாநிலத்தில் உள்ள கஷாங் நாலா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அவா்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காா் ஓட்டுநா் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கோபிநாத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஆனால் வெற்றி துரைசாமியைக் கண்டறிய முடியவில்லை. ஒரு வாரத்துக்கும் மேலாக அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்து நடந்த பகுதியில் இருந்த ரத்த கறை, திசுக்களை சேகரித்த பொலிஸாா், அதை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பியிருந்தனர்.

இதை அடுத்து வெற்றி துரைசாமியின் குடும்பத்தினரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. தடயவியல் நிபுணா்கள் மூலம் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, மரபணு முடிவுகள் ஹிமாசல பிரதேசத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிவித்தன.

இந்த நிலையில்தான், வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலதித் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a comment

Type and hit enter